ஞாயிறு, 10 மார்ச், 2024

 ஒரு மனிதனுக்கு துணிவைக் கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய் . ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருக்கும் ஆசாமிகள், அபாயச்சூழல் நிறைந்த வேலைகள், சவாலான வேலைகள், ரிஸ்க்கான வேலைகள் என்று எதையும் பிரித்துப் பார்க்காமல் துணிந்து செய்யக் கூடியவர்கள். அவர்களுக்கு மனபயம் இருக்காது. துக்கம், கஷ்டங்கள், மரணபயம் போன்றவைகளை அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் சிலர் ஊழல் செவதற்கோ, அவமானத்திற்கோ, அல்லது தண்டனைக்கோ பயப்படாமல் இருப்பார்கள். அதே செவ்வாய் வேறு ஒரு கிரகக் கூட்டணி யால் அல்லது பார்வையால் அவர்களுக்கு அந்த வித்தியாசமான துணிவைக் கொடுக்கும். செவ்வாய்தான் கிரகங்களில் ராணுவ அதிகாரியைப் போன்றவர். வீரர்களின் நாயகன் அவர்தான். யுத்தத்தின் நாயகனும் அவர்தான். குணங்களில், துணிவு, பொறுமை, தன்னம்பிக்கை, தலைமை தாங்கிச் செல்லும் தன்மை ஆகியவற்றை ஒரு ஜாதகனுக்குக் கொடுப்பவர் அவர்தான். சட்டென்ற கோபம் (short-tempered) அதிரடி, அடிதடி, வாக்குவாதம், விதண்டாவாதம் ஆகிய குணங்களுக்கும் அதிபதி அவர்தான். ராணுவத் தளபதிகள், ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு செவ்வாய்தான் நாயகன்! தொழில்நுட்ப அறிவிற்கும், இயந்திரங்கங்களை வடிவமைத்தல் மற்றும் இயந்திரங்களை லாவகமாகக் கையாளும் அறிவிற்கும், திறனுக்கும் ஆற்றலிற்கும் அவரே அதிபதி. நாட்டில் சட்டம், ஒழுங்கு, எரிபொருள் போன்றவற்றிற்குக்கான காரகன் அவர்தான். மனஉறுதி, தன்முனைப்பு, ஆற்றல், நிவாகத்திறன், சுதந்திர மனப்பான்மை ஆகிய அற்புத மனித குணங்களுக்கும் அவர்தான் அதிபதி.